

வத்தலக்குண்டு அருகே தெப்பத்துப்பட்டியில் இருந்து அரசு பஸ் ஒன்று, வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சித்திக் ஓட்டினார். வத்தலக்குண்டு அருகே ராஜா நகர் என்னுமிடத்தில் வந்தபோது பஸ்சில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பஸ் மோதி நின்றது. இதில் டிரைவர் சித்திக், பஸ்சில் பயணம் செய்த செம்மேட்டுப்பட்டியை சேர்ந்த அனுராதா, வடக்கு வலையப்பட்டியை சேர்ந்த ஆதம்மாள், சித்தரேவை சேர்ந்த நிதிஷ், வித்யா, பாலச்சந்திரன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.