

சென்னை,
மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும். ஆகவே ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 15ந்தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் புதிய குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூயாய் நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத்தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.
எனவே பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். இவை சட்டப்படி செல்லுபடியாகும் என மீண்டும் உறுதியளிக்கிறோம்.
மேற்கண்ட தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.