தரம் இல்லாத 10½ டன் விதைநெல் விற்பனைக்கு தடை

நாகை மாவட்டத்தில் விதைச்சான்று துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் தனியார் விற்பனை நிலையங்களில் 10½ டன் தரம் இல்லாத விதை நெல் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.
தரம் இல்லாத 10½ டன் விதைநெல் விற்பனைக்கு தடை
Published on

நாகை மாவட்டத்தில் விதைச்சான்று துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் தனியார் விற்பனை நிலையங்களில் 10 டன் தரம் இல்லாத விதை நெல் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.

விதை விற்பனை

நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 15 தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திடீர் ஆய்வு

சென்னை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை இயக்குனர் அறிவுறுத்தலின்பேரில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர்கள் வாசுகி (மதுரை), சித்ரா (நாகை) ஆகியோர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அகிலா, கோபி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.

அப்போது விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல், விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆய்வு செய்யப்பட்டது.

தடை விதிப்பு

விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 65 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து விதை விற்பனை நிலையங்களில் விதை சட்டத்தின் கீழ் தகுதி இல்லாமல் குறைகளுடன் இருப்பில் இருந்த ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 980 மதிப்பிலான 10.541 மெட்ரிக்டன் விதைநெல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. ஆய்வின்போது நாகை விதை ஆய்வாளர் முருகராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com