செல்போனில் படம் பார்த்ததை பாட்டி கண்டித்ததால் 10 வயது சிறுவன் தற்கொலை

கோப்புப்படம்
சென்னை பல்லாவரத்தில் 10 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் மாரியப்பன் (10 வயது). பெங்களூருவில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5-ம் வகுப்புக்கு சென்றிருந்தார். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், மூங்கில் ஏரி, கஸ்தூரி பாய் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மாரியப்பன் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை அவரது பாட்டி வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் பணி முடிந்து திரும்பியபோது, பூட்டிய வீட்டுக்குள் மாரியப்பன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் மாரியப்பன் செல்போனில் படம் பார்த்ததை அவரது பாட்டி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






