

தூத்துக்குடி,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி (23.4.2026) நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர்கள் மத்தியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமையான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான இளம்பகவத் தலைமை வகித்தார். பொதுமக்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைகளின் மீது, "100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்" மற்றும் "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கர்கள்) கலெக்டர் ஒட்டி தொடங்கி வைத்தார்.
கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களிடம் இந்த ஒட்டு வில்லைகளை வழங்கிய கலெக்டர், ஒவ்வொரு வீட்டிற்கும் சிலிண்டர் கொண்டு செல்லும் போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் எரிவாயு முகமை பிரதிநிதிகள் உடனிருந்தனர்.