

சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“திராவிடர் எழுச்சி நாள், முத்தமிழறிஞர் கருணாநிதியின் 103-ம் பிறந்த நாளையொட்டி 4 மாநிலங்களில் 103 பிரசார கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 'திராவிடத்திற்கு' என்றும் எழுச்சிதான். அதன் எல்லை தமிழ்நாடு அல்ல - இந்தியா கூட அல்ல. இந்த மானிடம் உலகெங்கும் பரந்து விரியும் மனிதநேயக் கொள்கை சுயமரியாதையின் மறுபெயரே திராவிடம்.
அதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டவும், மூத்த தலைமுறைகளுக்கு நினைவூட்டவும், தமிழ்நாடெங்கும் கருணாநிதியின் 103-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி, ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய நாட்களில் 103 கூட்டங்கள் "திராவிடர் எழுச்சி நாள் விழா"வாக நடைபெறும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, மராட்டிய ஆகிய 4 மாநிலங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் கூட்டங்கள் பட்டியல் விரைவில் வெளிவரும்.”
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.