

சென்னை,
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கம் அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. அதற்கான சாவிகளும் ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கர் திறக்கப்பட்டது. ஆனால் அதில் 296.66 கிலோ தங்கமே இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கமானது சி.பி.ஐ.க்கு சொந்தமான பண்டக சாலையில் வைக்கப்படவே இல்லை. அந்த தங்கம் முழுமையாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள லாக்கரில் தான் வைக்கப்பட்டிருந்தது.
லாக்கரில் உள்ள தங்கம் குறைந்தது குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது சி.பி.ஐ. மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.