

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று விளாத்திகுளம் எல்லைக்குட்பட்ட விருசம்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான மாரிமுத்து (வயது 38), ராஜ்(28) மற்றும் குளத்துரைச் சேர்ந்த சுரேந்திரன்(32) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மேற்சொன்ன போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 105 கிலோ 650 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.