

வால்பாறை
வால்பாறை அருகில் உள்ள தோணிமுடி எஸ்டேட் முதல் பிரிவைச் சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி அல்கத்திகா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வால்பாறையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தை டிரைவர் அரவிந்த் ஓட்டிக் கொண்டு சென்று தோணிமுடி எஸ்டேட் பகுதியில் பிரசவ வலியில் துடித்த அல்கத்திகாவை ஏற்றிக் கொண்டு வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை வழியில் நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மருத்துவ உதவியாளர் செல்வக்குமார் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாயையும் குழந்தையையும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர்.