நாமக்கல் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 27-வது இடம் பிடித்ததால் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 27-வது பிடித்ததால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 27-வது இடம் பிடித்ததால் அதிர்ச்சி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 27-வது பிடித்ததால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழத்தில் நேற்று காலை 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனிடையே நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 384 மாணவர்கள், 9 ஆயிரத்து 405 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 789 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். அதில் 8 ஆயிரத்து 839 மாணவர்கள், 8 ஆயிரத்து 750 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 589 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.88 ஆகும்.

அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 153 அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 836 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். அதில் 9,061 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் தேர்ச்சி சதவீதம் 83.62 ஆகும். மேலும் ஆதிதிராவிட நல பள்ளி மாணவர்கள் 84.61 சதவீதம் பேரும், பழங்குடியினர் நல பள்ளி மாணவர்கள் 72.42 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

27-வது இடம்

இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் 303 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். அதில் 14 அரசு பள்ளிகள் உள்பட 99 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. மேலும் மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டம் 27-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:-

உரிய நடவடிக்கை

நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. கடும் முயற்சி எடுத்து சுமார் 1,000 மாணவர்களை பள்ளிக்கு வர வைத்தோம். எந்தெந்த பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து உள்ளதோ, அதற்கான காரணங்கள் கண்டறியப்படும். அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் சிறந்த இடத்தை நாமக்கல் மாவட்ட மாணவர்கள் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com