பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை: திருச்சியில் பரபரப்பு..!

விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு திங்கள்கிழமை மாலை திடீரென பிரசவம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை: திருச்சியில் பரபரப்பு..!
Published on

திருச்சி,

திருச்சியில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவிக்கு, திங்கள்கிழமை மாலை விடுதி வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுதியில் தங்கி அவர் கல்வி பயின்று வந்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு திங்கள்கிழமை மாலை திடீரென பிரசவம் ஏற்பட்டுள்ளது. விடுதி வளாகத்திலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, தகவலறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை

மேலும், பள்ளிக் கல்வித்துறை சார்பிலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவியின் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் மீது போலீசார் விசாரணை

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்ததாகவும், அதன் மூலம் அவர் கர்ப்பமடைந்ததாகவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com