

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத ஆண் குழந்தை, எதிர்பாராதவிதமாக மின் மோட்டாரைத் தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குமால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தை மகிழன். தாய் பாஸ்டினா குழந்தையை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்புறம் குழந்தை மகிழன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இயங்கிக் கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரை குழந்தை மகிழன் தொட்டுள்ளான். இதில் பலத்த மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.