ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 11 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

வேலூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 11 பவுன் நகை, வெள்ளிப் பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 11 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
Published on

வேலூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 11 பவுன் நகை, வெள்ளிப் பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நகை திருட்டு

வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் சையத் ரசூல் (வயது 54). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தரைத்தளத்தின் வழியே வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கதவைத் திறந்து வீட்டில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்றனர்.

காலையில் சையத் ரசூல் எழுந்து பார்த்தபோது வீட்டில் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முகமது அப்சல் (30). இவர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர் ஒருவர் அவரது மோட்டார்சைக்கிளையும் அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.3 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த சம்பவங்கள் குறித்து இருவரும் தனித்தனியே வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சலவன்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முரளி என்பவரின் மகன் ராகுல் ராபர்ட் (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் நகை, வெள்ளி பொருட்கள் திருடியதும், மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் பதுக்கி வைத்திருந்த நகை, வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com