114 விநாயகர் சிலைகள் கரைப்பு

நாகையில் 114 விநாயகர் சிலைகள் புதிய கடற்கரையில் கரைக்கப்பட்டன.
114 விநாயகர் சிலைகள் கரைப்பு
Published on

நாகையில் 114 விநாயகர் சிலைகள் புதிய கடற்கரையில் கரைக்கப்பட்டன.

114 விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சக்தி விநாயகர் குழு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாகையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நாகை புதிய கடற்கரையில் கரைக்கப்படும்.

அதன்படி சக்திவிநாயகர் குழு சார்பில் கடந்த 18-ந்தேதி நாகை, கீழ்வேளூர், சிக்கல், செல்லூர், பாலையூர், காடம்பாடி, நாகூர் என பல்வேறு இடங்களில் 114 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

புதிய கடற்கரையில் கரைப்பு

நேற்று 114 விநாயகர் சிலைகள் நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது. அங்கு சக்தி விநாயகர் குழு சார்பில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, சக்தி விநாயகர் குழு அமைப்பாளர் ஆதிமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து சவுந்தரராஜ பெருமாள் கோவில் வாசலில் மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. நீலா மேல வீதி, புதிய பஸ்நிலையம், பப்ளிக்ஆபீஸ் ரோடு, ஏழைப்பிள்ளையார் கோவில் வழியாக புதிய கடற்கரைக்கு விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டன. அப்போது வழிநெடுகில் இருந்த பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.

பாதுகாப்பு பணி

பின்னர் விநாயகர் சிலைகள் படகுகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு புதிய கடற்கரையில் கரைக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில் துணை போலீஸ் சூப்பரண்டுகள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, தியாகராஜன் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தகட்டூர் பண்டாரதேவன்காடு

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பண்டாரதேவன்காடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சித்தி விநாயகர் சிலை நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் சிலைக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பண்டாரதேவன்காடு பகுதியில் இருந்து விநாயகர் ஊர்வலம் சூரியன்காடு, நடுக்காடு, கோவிந்தன்காடு, ராமகோவிந்தன்காடு, தகட்டூர் கடைத்தெரு, சுப்பிரமணியன்காடு, சமத்துவபுரம் வழியாக தகட்டூர் பைரவர் கோவில் பாலம் அருகில் முள்ளியாற்றில் கரைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com