12 ஆயுள் தண்டனை கைதிகள் நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு

கடலூர், கோவை, வேலூர் மற்றும் சென்னை சிறைகளில் இருந்து மொத்தம் 12 பேரை முன்விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
12 ஆயுள் தண்டனை கைதிகள் நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, 12 ஆயுள் தண்டனை கைதிகளை நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று ஆற்றிய உரையில், அண்ணாவின் 113-வது பிறந்த நாளான 15.9.2021 அன்று நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்திட இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஆயுள்தண்டனை பெற்று 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களின் தண்டனைகளை குறைத்து, அவர்களை முன்விடுதலை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட 11.1.2022 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரைப்படி, கடலூர் மத்திய சிறையிலிருந்து 4 கைதிகளும், கோவை மத்திய சிறையிலிருந்து 6 கைதிகளும், வேலூர் மத்திய சிறையிலிருந்து ஒரு கைதியும், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு கைதியும், என மொத்தம் 12 ஆயுள் தண்டனை கைதிகளை நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது."

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com