

சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகெ உள்ள கருத்தானூர் பகுதியை சேர்ண்டவர் சக்திவேல்(வயது 38). இவர் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது கடையில் சத்யா(வயது 31) என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.
சத்யாவுக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் இருந்த நிலையில், அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த சூழலில், சத்யாவுடன் சக்திவேல் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சக்திவேலுடனான பழக்கத்தை சத்யா நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்கு சக்திவேல் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சத்யாவும், அவரது மகனும் இருந்துள்ளனர். அவரது மகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், சத்யாவின் வீட்டிற்குள் புகுந்த சக்திவேல், தன்னிடம் இருந்த அரிவாளால் சத்யாவையும், அவரது மகனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சத்யா ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சத்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளி சக்திவேலின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இந்நிலையில், போலீசார் சக்திவேலை தேடிச் சென்றபோது, அவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.