

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நாளுக்கு நாள் தெருக்களில் நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் சாலைகளின் நடுவில் கூட்டம் கூட்டமாய் நாய்கள் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவில் கடந்த 3 தினங்களில் 13 நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடபாகம் காவல் நிலையத்திற்கும், கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நாய்களை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் இந்த நாய்கள் அனைத்தும் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.