சரக்கு ரெயிலில் 1,306 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன

தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,306 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தது. குறுவை சாகுபடிக்கான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரெயிலில் 1,306 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
Published on

குறுவை சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் குறுவை நெல் நடவு, நெற்பயிருக்கு மேலுரம் இடுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு ஆகியவற்றில் உள்ள நீர் இருப்பினை பயன்படுத்தி விவசாயிகள் மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

எனவே, குறுவை பருவ நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் யூரியா 5,226 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 1,743 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 756 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 4,947 மெட்ரிக் டன்கள் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உர மூட்டைகள்

இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் 604 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 702 மெட்ரிக் டன்களும் என மொத்தம் 1,306 மெட்ரிக் டன் உர மூட்டைகள் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து சரக்கு ரெயில் மூலம் புதுக்கோட்டைக்கு வந்தது.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் வேகன்களில் இருந்து உர மூட்டைகள் இறக்கப்பட்டு லாரிகள் மூலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார். அவருடன் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன், வேளாண்மை அலுவலர் முகமது ரபி மற்றும் ஸ்பிக் நிறுவன பிரதிநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

கடும் நடவடிக்கை

மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும் உரங்களை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com