

நன்னிலம்:
நன்னிலம் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
லாரியும், அரசு பஸ்சும் உரசிக்கொண்டது
மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் திருவாரூருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவராக நெல்லிவனநாதன் என்பவரும், கண்டக்டராக சசிகுமார் என்பவரும் பணியில் இருந்தனர்.
திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கொட்டூர் அருகே சென்றபோது எதிரே திருவாரூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும், அரசு பஸ்சும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டது.
புளிய மரத்தில் மோதியது
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் ஆனந்தி, ரேவதி, விமலா ராணி, மங்கையர்க்கரசி, ஜேசிபா பர்வீன், விஜயலட்சுமி, சுமதி, துரையன், மணிகண்டன், அபிபுல்லா, கணேசன், சரவணன் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
14 பேர் காயம்
தகவல் அறிந்து நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.