தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்


தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Aug 2025 7:05 AM IST (Updated: 6 Aug 2025 11:15 AM IST)
t-max-icont-min-icon

14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணைக்காக புத்தளம் கடற்படை முகாமிற்கு மீனவர்களை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story