இஸ்ரேலில் இருந்து 147 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர் - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல்

இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தமிழகம் திரும்பியுள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து 147 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர் - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல்
Published on

சென்னை,

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டன. அவர்களுடன் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியப்பட்டன. அதன் அடிப்படையில், இதுவரை 4 கட்டங்களாக டெல்லி வந்த 98 தமிழர்கள் தமிழக அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் மூலம் புதுடெல்லி வந்தடைந்த 23 தமிழர்கள் தமிழக அரசால் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கு விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது, கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த 4 பேரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசின் செலவில் ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தார்.

மேலும் சென்னை விமான நிலையம் வந்த 17 பேரை கலாநிதி வீராசாமி எம்.பி., வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோன்று மதுரை விமான நிலையம் வந்த 2 பேர் மாவட்ட நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, இஸ்ரேலில் இருந்து 121 பேர் தமிழக அரசின் சார்பிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழகம் வந்தடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com