கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 14,715 கனஅடி தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 14,715 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 14,715 கனஅடி தண்ணீர் திறப்பு
Published on

வெள்ளப்பெருக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணை கடல் போல் காட்சி அளித்தது. குறிப்பாக, கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும், பல்வேறு மலை, காடுகளில் இருந்து வரும் மழைநீரால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 715 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் 3 சிறிய மதகுகள் மற்றும் 5 பிரதான மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அணை பூங்காவிற்குள் செல்லும் தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளதால், அவ்வழியே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணையின் இருபகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்று பிற்பகலில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாலை அந்த வழியாக சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து பெய்து வரும் மழையை பொறுத்து, அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com