

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கனமழையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் செலுத்தவேண்டிய மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத்தொகையை மின் துண்டிப்பு, மறு இணைப்பு மற்றும் தாமத கட்டணமின்றி செலுத்துவதற்கான கடைசி நாள் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் கடந்த 8-ந் தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை உள்ளவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த தற்போதைய கடைசி நாளில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் வருகிற 16-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை உள்ளவர்களுக்கு தங்களது மின் கட்டணத்தை வருகிற 30-ந் தேதி வரை செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.