கோவில்பட்டியில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் மூப்பன்பட்டி கண்மாய் அருகே நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் மூப்பன்பட்டி கண்மாய் அருகே நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அதில் 2 பேரைப் பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் விக்னேஷ்(எ) முருகேசன் (வயது 30), அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன்(25) என்பது தெரியவந்தது. இந்த 2 பேர் மற்றும் தப்பியோடிய சாஸ்திரி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள்(30) ஆகியோர் மதுரையில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி, அதைச் சிறிய பொட்டலங்களாகப் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை (1.5) கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிவபெருமாளை போலீசார் தேடி வருகின்றனர்.






