ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை- ரூ.80 ஆயிரம் கொள்ளை

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை- ரூ.80 ஆயிரம் கொள்ளை
Published on

புதுக்கோட்டை:

ஓய்வு பெற்ற அதிகாரி

புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ். நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 70). இவர் மத்திய அரசின் நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தார்.

காந்திநகரில் சொந்தமாக வீடு கட்டும் இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக ராஜகோபால் தனது குடும்பத்துடன் அங்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.

நகைகள் கொள்ளை

இந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கணேஷ் நகர் போலீஸ் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com