தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

மகனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை
Published on

திருச்சி,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் நேதாஜி. பாய்லர் ஆலையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இவர் தம்பி தேவேந்திரன் என்பவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

தொழிலதிபர்களான இவர்களுக்கு 6 கிரசர்கள் மற்றும் தனியார் பஸ்கள் உள்ளன. மேலும் சாலை உள்ளிட்ட பணிகளை எடுத்து ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை தேவேந்திரனின் இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தொழிலதிபர் ஒருவரது மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனால் குடும்பத்தினர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்று விட்டனர். நேற்று மாலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர்.

150 பவுன் நகை கொள்ளை

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அலமாரிகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பூஜை அறையில் இருந்த அலமாரிகளும் உடைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com