பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள்

பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள்
Published on

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2022-23-ம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.32,537.02 கடன் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய முனைம தொகை 1.5 சதவீதம் மட்டுமே, அதன்படி ஏக்கருக்கு ரூ.488.05 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி ஆகும். எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு பதிவு செய்து இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் 1432-ம் பசலிக்கான நெல் சம்பா சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து முனைம தொகையினை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வணிக வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ காப்பீடு செய்து அதற்குரிய ரசீதை பெற்றுக்கொள்ளலாம். எனவே, விவசாயிகள் இறுதிநேர நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களுடைய விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பதிவு செய்த விவரங்களை சரிபார்ப்பதற்கும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், காப்பீட்டு முனைம தொகையை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தினையோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தினையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com