திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்

திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓடினர்.
திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்
Published on

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த மேல்அயனம்பாக்கம், பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இங்கு குடிபழக்கம் மற்றும் போதைக்கு அடிமையான 18 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று அதிகாலை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 17 பேர் ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் தப்பி ஓடியவர்களில் 8 பேர் மீண்டும் போதை மறுவாழ்வு மையத்துக்கு திரும்பி வந்துவிட்டனர். 9 பேர் மட்டும் மாயமாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் போதை மறுவாழ்வு மையத்தில் ஊழியர்கள் தாக்கியதால் அவர்கள் தப்பிச் சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com