ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

இறுதி அஞ்சலி செலுத்த வந்த 25-க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(வயது 17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய் ஒன்று துரத்தி கடித்துள்ளது.

இதனை தொடர்ந்து அவருக்கு உடல்நில பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த 25-க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com