

கடலூர்,
கடலூரில் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பகீர் தகவல் வெளிவந்துள்ளது.
கடலூர் அருகே பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 31). இவர் கார் டிரைவராக பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று புதுச்சேரி எல்லை அருகே உள்ள இரட்டைசாவடி அருகே தனது காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்த சசிக்குமார் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், 8 பேர் கைது செய்ப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுவன் தயாரித்த நாட்டு வெடிகுண்டுகளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலுக்கு கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு வெடிகுண்டுகளை போலீசாரின் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் கீரை கட்டுகள் மற்றும் கோல மாவுக்குள் மறைத்து சம்பவ இடத்திற்கு கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.