

நீலகிரி,
முதுமலையில் 17 வயது பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.. இதே போல் விலை உயர்ந்த மரங்களும் வனப்பகுதியில் உள்ளது. இதனால் வன குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புலிகள் காப்பகத்தின் உள்மண்டல பகுதியான தெப்பக்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட கக்கநல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது இம்பரல்லா ஓடை அருகில் 17 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் துணை இயக்குநர் வித்யாதர் உத்தரவின்படி வனச்சரகர் சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் காட்டு யானை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இறந்த பெண் யானையின் உடற்கூராய்விற்கான முன்னேற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.
பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்களை மருத்துவ குழுவினர் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கை வந்த பிறகு காட்டு யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து தெப்பக்காடு வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.