மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை.. சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு

முருகன் சிலையை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை.. சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு
Published on

மருதமலை,

விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்வதற்கு யானைகள் இந்த பாதையை பயன்படுத்துகின்றன.

இந்த பகுதியில் 184 அடிக்கு முருகன் சிலையை அமைக்க வேண்டுமானால், வனப்பகுதிகளை அழிக்க வேண்டும். இது யானைகளின் வழித்தடத்தை பாதிக்கும். அதனால், விலங்குகள், மனிதர்களுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கும். முருகன் சிலையை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையின் ஒப்புதல்களை பெறவில்லை. எனவே, முருகன் சிலையை அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் முரளிதரன் கூறியிருந்தார்.

மேலும், மற்றொரு யானைகள் வழித்தடமான ஆனைகட்டியில் இயங்கும் சட்டவிரோத ரிசார்ட்களை மூட உத்தரவிட வேண்டும். கோவை, ஆனைகட்டி இடையேயான மாநில நெடுஞ்சாலையில் இரவுநேர போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் வனத்துறை பதிலளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com