

சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. சென்னையில் பல்வேறு பகுதியில் தங்கி தொழில் மற்றும் வேலை செய்து வரும் மக்கள் ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நேற்று மட்டும் 3,431 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று 3,570 சிறப்பு பஸ்களும் நாளை மதியம் ஒரு மணி வரை 600 சிறப்பு பஸ்களும் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடுகின்றன. நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல இரண்டு சிறப்பு ரெயிலும், கோவைக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இன்று கூடுதலாக இயக்கப்படுகிறது.