பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,988 கன அடியாக அதிகரிப்பு..!

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.66 அடியாக உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்து ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 411 கனஅடியாக குறைந்தது.

இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,988 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.66 அடியாக உள்ள நிலையில், தற்போது அணையில் 17.1 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அதே சமயம் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com