

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவன தலைவர் சி.கே.ரங்கநாதன் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
திருமண நிச்சயதார்த்த விழா கடந்த ஜூலை 10-ந் தேதி சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் கருணாநிதி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
மனோரஞ்சித்-அக்ஷிதா திருமணம் நவம்பர் 1-ந்தேதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் நடக்கிறது. தனது கொள்ளு பேரன் திருமணத்தை கருணாநிதி முன்னின்று நடத்தி வைக்கிறார். இதில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
கருணாநிதி உடல் நலமின்மையால் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். உடல் நலம் தேறிய கருணாநிதி கடந்த 19-ந்தேதி முரசொலி அலுவலகத்துக்கு சென்று முரசொலி பவளவிழா காட்சியகத்தை பார்வையிட்டார். தற்போது கொள்ளு பேரன் திருமணத்தை நடத்தி வைக்க உள்ளார். இது தி.மு.க. தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.