சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்ச வழக்கு: பெங்களூரு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜராகவில்லை

சிறையில் சொகுசு வசதி பெறுவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் நேற்று சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை ஜூன் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்ச வழக்கு: பெங்களூரு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜராகவில்லை
Published on

ரூ.2 கோடி லஞ்ச வழக்கு

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 3 பேரும் சிறைவாசம் முடிந்து விடுதலையாகி விட்டனர். பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி அடைக்கப்பட்டு இருந்த போது அங்கு சொகுசு வசதிகளை பெறுவதற்காக, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார், சிறை அதிகாரிகளான கிருஷ்ணகுமார், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா மற்றும் இளவரசி மீது வழக்குப்பதிவு செய்தார்கள். மேலும் விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை விதானசவுதா அருகே லோக் அயுக்தா கோர்ட்டில் தொடங்கியது.

ஏப்ரல் 16-ந் தேதி ஒத்திவைப்பு

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி லட்சுமி நாராயணபட் உத்தரவிட்டு இருந்தா. அதாவது கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, கடந்த மாதம் 11-ந் தேதி சசிகலா, இளவரசி, சிறை அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் நேரில் ஆஜரானார்கள். சிறை சூப்பிரண்டுகளான டாக்டர் அனிதாவும், கிருஷ்ணகுமாரும் தங்கள் மீதான விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை வாங்கி இருந்ததால் ஆஜராகாமல் இருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி லட்சுமி நாராயண பட் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இவ்வழக்கு நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சசிகலாஆஜராகவில்லை

ஆனால் சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கான விளக்கம் அடங்கிய மனுவை நீதிபதியிடம் வழங்கினார்கள். அதுபோல், அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் சார்பில் ஆஜரான வக்கீல்களும், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்பதற்கான விளக்க மனுவை அளித்தார்கள்.

அந்த மனுக்களை நீதிபதி லட்சுமி நாராயண பட் ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com