சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை மத்திய தொழிற் பாதுகாப்புப் படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது
Published on

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் இருந்து பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு மாறக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று உள்ளது. இங்குள்ள கழிவறைக்கு சென்ற விமான நிலைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வருவதை கண்ட அங்கு பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை போலீசார் சந்தேகமடைந்தனர்.

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமார் தலைமையிலான போலீசார் விமான ஊழியரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்தனர். அவரை பாதுகாக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விசாரித்தனர்.

4 கிலோ தங்கம் பறிமுதல்

அப்போது அந்த ஊழியர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், உடனே அவரை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தினர். அதில், அவர் பெயர் சஞ்சய் என்பதும், அவரது உள்ளாடையில் 3 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் மேலும் விசாரணையில் இறங்கினர்.

சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விசாரணையில், துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது நிஸ்தார் அபூசாலி (32) என்பவர் தங்கத்தை கடத்தி வந்ததும், பின்னர் அதை தனியார் நிறுவன ஊழியர் மூலம் கழிவறையில் பறிமாறிவிட்டு கொழும்பு விமானத்தில் பயணம் செய்ய இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துடன் முகமது நிஸ்தார் அபூசாலி என்ற இலங்கை வாலிபர், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர் ஆகியோரை மேல் நடவடிக்கைக்காக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை கண்டுபிடித்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com