உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2¾ கோடி வருவாய்

பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 85 லட்சம் வருவாய் கிடைத்தது.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2¾ கோடி வருவாய்
Published on

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விழாக்காலத்தில் முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலில் பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், தங்க பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.

உண்டியல் காணிக்கை

அதன்படி பழனி முருகன் கோவிலில், கடந்த மாதம் 25-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை பணி நேற்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை காணிக்கை எண்ணும் பணி நடக்கின்ற மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடந்தது.

ரூ.2 கோடியே 85 லட்சம் வருவாய்

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரத்து 263 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 901 செலுத்தப்பட்டிருந்தது. இதேபோல் தங்கசங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 1,070 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 13 கிலோ (13,250) கிராம் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com