ரெயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை

திருப்பூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை
Published on

திருப்பூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பூரை அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் மங்களூருவில் இருந்து புதுச்சேரி செல்லும் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் திடீரென்று ரெயில் முன் 2 பெண்கள் பாய்ந்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் தண்டவாளத்தில் கிடந்த 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாய்-மகள் பலி

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள பரமசிவம் பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி தனலட்சுமி (வயது 39), அவர்களுடைய மகள் ரக்சனா (17) என்பது தெரியவந்தது. ரக்சனா பிளஸ்-1 படித்து வந்தார். சரவணன் சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்துள்ளார். சரவணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருவதால் விசைத்தறி கூடத்தை சரிவர இயக்காமல் இருந்துள்ளார். தொழில் சரியாக இல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து தாய், மகள் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் சுற்றுப்புற பகுதிகளில் தேடி வந்துள்ளனர். அதன் பிறகே சோமனூர் அருகே இருவரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பெரும் சோகம்

இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சினை காரணமாக தாய், மகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com