ராமநாதபுரம் அருகே விசைப்படகு கடலில் மூழ்கி 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மூழ்கி மாயமான 3 மீனவர்களில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே விசைப்படகு கடலில் மூழ்கி 2 மீனவர்கள் உயிரிழப்பு
Published on

ராமநாதபுரம்,

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் நேற்றுடன் (ஜூன் 14) நிறைவடைந்தது.

இந்த நிலையில் நேற்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று அதிகாலையிலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்குவாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் விசைப்படகு சேதமடைந்ததால் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் விசைப்படகில் இருந்த 5 மீனவர்களில் இருவர் மற்றொரு படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கி மாயமான 3 பேரில் இருவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆரோக்கியம், பரகத்துல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com