கார் மோதி 2 பேர் பலி

கோபால்பட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கார் மோதி 2 பேர் பலி
Published on

 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர்கள் சந்தானம் (வயது 47), ராஜ்குமார் (35). பாண்டான்குடியை சேர்ந்தவர் பிரகாஷ் (30). கூலித்தொழிலாளர்கள்.

நேற்று இவர்கள் 3 பேரும், திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கன்னியாபுரத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். நத்தம்-திண்டுக்கல் சாலையில், எஸ்.கொடை பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

அப்போது கோபால்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சந்தானம், ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த பிரகாஷ், உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியாண்டி, சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதைத்தொடர்ந்துபிரகாசை மீட்டு, சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வி.எஸ்.கே.குரும்பபட்டியை சேர்ந்த கார் டிரைவர் ராமகிருஷ்ணன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com