விழுப்புரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

விழுப்புரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.
விழுப்புரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
Published on

விழுப்புரம் அருகே உள்ள இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன்(வயது 36). இவர் தனது மோட்டார் சைக்கிளை விழுப்புரம் நகராட்சி பூங்கா நுழைவுவாயில் அருகில் நிறுத்திவிட்டு பூங்காவிற்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவராமன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர். இதேபோல் திண்டிவனம் அருகே எறலிக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்(25) என்பவர், விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு மளிகை கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்குள்ள நடனமாடும் குழுவினரை பார்க்கச்சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com