மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது

வடமதுரை அருகே, இரும்பு வியாபாரியின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
Published on

வடமதுரை அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). இவர் அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 21-ந்தேதி இரவு இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டர்சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வடமதுரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்குபின் முரணாக அவர்கள் பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அய்யலூர் எஸ்.கே.நகரை சேர்ந்த திருமுருகன் (23), மகாலட்சுமி நகரை சேர்ந்த சின்னராஜா (34) என்பதும், செல்வராஜின் மோட்டார்சைக்கிளை திருடி விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com