ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடவடிக்கை

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர். மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடவடிக்கை
Published on

சூரமங்கலம்

ரெயிலில் சோதனை

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சலம் ரெயில்வே போலீசார் பாலமுருகன், சக்திவேல், தமிழ்ச்செல்வன், அருண், ஸ்ரீநாத் ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது காட்பாடி ரெயில் நிலையம் முதல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை மோப்ப நாய் உதவியுடன் நடைபெற்றது.

அப்போது சந்தேகப்படும் படியாக இருந்த கருப்பு பையை மோப்ப நாய் ஆகாஷ் மோப்பம் பிடித்து கவ்வியது. அந்த பையை திறந்து பார்த்ததில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பை யாருடையது என போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகா, மேலராங்கியத்தை அடுத்துள்ள தவத்தாரேந்தல் பகுதியை சேர்ந்த சின்ன பாண்டி மகன் வெள்ளையன் (வயது 20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, உத்தபானைக்கனூரை அடுத்த வெள்ளை மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் அருள் பாண்டி (33) ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் பெத்தாபுரம் என்ற ஊருக்கு சென்று அங்கு உசைன் அக்பர் என்பவரிடம் ஒரு பண்டல் கஞ்சாவை ரூ.5 ஆயிரம் வீதம் 5 பண்டல் கஞ்சாவை வாங்கியது தெரியவந்தது. மேலும் அவர்கள் சிவகங்கை மாவட்டம் தவத்தாரேந்தல் சென்று சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து கஞ்சா விற்பனை செய்வதற்காக வாங்கி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

பின்னர் இவர்கள் இருவரையும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சாவையும் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையன், அருள் பாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com