விஷம் குடித்து வந்து வகுப்பறையில் மயங்கிய 2 மாணவிகள்.. காரணம் என்ன..?

அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷம் குடித்து வந்து வகுப்பறையில் மயங்கிய 2 மாணவிகள்.. காரணம் என்ன..?
Published on

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவிகள் இரண்டு பேர், 10-ம் வகுப்பு மற்றும் 9 வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் தோழிகள் ஆவர். இருவரும் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் பெற்றோர் இருவரையும் வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் 2 மாணவிகளும் பள்ளிக்கு சென்றனர். செல்லும் வழியில் ஒரு கடையில் எறும்பு பொடி வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்ததாக தெரிகிறது. பின்னர் இருவரும் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் 2 மாணவிகளுக்கும் மயக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்கள் வகுப்பறைகளில் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மாணவிகளும் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் விஷம் குடித்துவிட்டு வந்து பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com