காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி

காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி
Published on

ராணிப்பேட்டை,

காஞ்சீபுரம் மாவட்ட எல்லையில் உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சற்று தொலைவில் ராணிப்பேட்டை மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் உள்ளது. நேற்று இவரது நிலத்தில் நெல் நடவு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக தன் மகன் ஜீவானந்தத்தை (வயது 17) ஓச்சேரிக்கு சென்று நெல் நாற்றுகளை எடுத்து வர கூறினார்.

அதன்படி ஜீவானந்தம் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள தன் நண்பர்களான அருண்குமார் (18), சச்சின்குமார் (17) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு ஓச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கொண்டாபுரம் பகுதியில் சென்றபோது அதே பாதையில் தவறான திசையில் எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இவர்களது மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 வாலிபர்கள் பலி

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சச்சின்குமார், ஜீவானந்தம் ஆகியோர் வாலாஜா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது சச்சின்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். ஜீவானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர்கள்

இறந்த அருண்குமார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். சச்சிகுமார் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். ஜீவானந்தமும் அவருடன் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியுள்ளார்.

இதனிடையே விபத்து நடந்தவுடன் டிப்பர் லாரியை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com