வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்புக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பின்புறம், திருமலை நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 41 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பாது கிருஷ்ணகிரி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணிவண்ணன் (வயது32) என்பவர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கடத்த பதுக்கி வைத்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com