ஆசிரியையை கட்டிப்போட்டு நகை பறித்த தோழி உள்பட 2 பெண்கள் கைது

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆசிரியையை கட்டிப்போட்டு நகை பறித்த தோழி உள்பட 2 பெண்கள் கைது
Published on

சோழவந்தான்,

சோழவந்தானில் ஆசிரியையை கட்டிபோட்டு நகை பறித்த சம்பவத்தில் பர்தா அணிந்து வந்து கைவரிசை காட்டிய அவரது தோழி உள்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியை மீது தாக்குதல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 43). ராஜலட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் டியூசனும் நடத்தி வந்தார் நேற்று முன்தினம் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட பர்தா அணிந்த 2 பெண்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ராஜலட்சுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து. அவரது கை மற்றும் கால்களை கட்டிப் போட்டதாக கூறப்படுகிறது. 2 பெண்களும் ராஜலட்சுமியை அடித்து, உதைத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

2 பெண்கள் கைது

இதுகுறித்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சோழவந்தான் அருகே தென்கரையை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி அன்னபூரணி (41), அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி கனிமொழி (36) என்பதும் தெரியவந்தது. இதில் அன்னபூரணி ஆசிரியை ராஜலட்சுமிக்கு தோழி என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து நகையை கைப்பற்றினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com