

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தச்சன்மொழியைச் சேர்ந்த பேச்சிமுத்து, அப்பகுதியில் உள்ள கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது 2 வயது மகள் மகிழினியுடன் இருசக்கர வாகனத்தில் உடன்குடி பஜாருக்குச் சென்று, பின்னர் சாத்தான்குளம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
உடன்குடி – திசையன்விளை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல பேச்சிமுத்து முயன்றுள்ளார். அப்போது சமநிலை தவறியதில், குழந்தை மகிழினி திடீரென வண்டியில் இருந்து கீழே விழுந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, பேருந்தின் பின்சக்கரம் குழந்தையின் தலை மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் பிரபு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரைச் சேர்ந்த கருப்பசாமி (38) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது உடன்குடி மற்றும் தச்சன்மொழி பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.