சமையல்காரர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது

சமையல்காரர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சமையல்காரர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது
Published on

சமையல்காரர் குத்திக்கொலை

கரூரில் உள்ள மக்கள்பாதை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). சமையல்காரராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி இரவு சரவணன் அவரது வீட்டில் இருந்தார். அப்போது அவர் வீட்டின் முன்பு 2 பேர் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர்.

இதையடுத்து சரவணன், 2 பேரிடமும் இங்கிருந்து ஏன் மதுக்குடிக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனின் தலை, கை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய 2 பேர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சரவணனை கொலை செய்தது சின்ன ஆண்டாள் கோவில் பகுதியை சேர்ந்த தமிழழகன் (29), மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com